கோவில்களில் பெரும்பாலானவை தனித்துவமான கட்டிடக்கலை அம்சம் கொண்ட தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்து உள்ளன.
இந்துசமய அறநிலையத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்துக்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. இதில் ஏறக்குறைய 35 ஆயிரம் கோவில்கள் ஆண்டு வருவாய் 10 ஆயிரத்துக்கும் குறைவாகும். அவற்றில் பல கோவில்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட புராதன கோவில்கள் பண்டைய அரசர்களால் நிர்ணயம் செய்யப்பட்டவையாகும், மேற்கண்ட கோவில்களின் பராமரிப்பிற்காக பண்டைய அரசர்களால் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.

மேலும் நிலங்களிலிருந்து போதிய வருவாய் ஈட்டக்கூடிய நிலங்கள் ஏதும் இல்லாததால் பக்தர்களால் அளிக்கப்படும் காணிக்கைகள் வாயிலாக பராமரிக்கப்பட்டு வருகிறது, 12 ஆயிரத்து 959 கோவில்களில் ஒரு வேளை பூஜை கூட நடத்த போதிய வருவாய் இல்லாததால் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது.

கோவில்களில் பெரும்பாலானவை தனித்துவமான கட்டிடக்கலை அம்சம் கொண்ட தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்து உள்ளன. ஆனால் அந்த கோவில்களில் போதிய வருவாய் இன்மையால் உரிய பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் உள்ளது அவற்றை முறையாக புனரமைத்து பராமரித்து பாதுகாக்க வேண்டியது இத்துறையின் முக்கிய கடமையாகும். நிதி வசதிமிக்க கோவில்களின் உபரி நிதியினை திருப்பணிக்காக நிதி உதவி தேவைப்படும் பிற கோவில்களுக்கு மானியமாக வழங்கினால் பல்லாயிரக்கனக்கான கோவில்களை புனரமைத்து, திருப்பணி செய்து குடமுழுக்கு செய்ய இயலும் எனவே போதிய வருவாய் இல்லாத கோவில்களை நிதி வசதிமிக்க கோவில்களில் இருந்து மானியம் பெற்று புனரமைத்திட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் தங்கள் மண்டலத்தில், சரகத்தில் உடனடியாக ஆய்வு செய்தும் அவற்றின் நிதிநிலைமையை பரிசீலித்தும் நிதி உதவி தேவைப்படும் கோவில்களின் பட்டியலை தயார் செய்ய வேண்டும். நிதி உதவி அளிக்கக்கூடிய அளவில் உபரி நிதி உள்ள கோவில்களின் பட்டியலை நிதி வசதியற்ற கோவில்களின் நிர்வாகிகளுக்கு வழங்க வேண்டும்.

நிதி உதவி தேவைப்படும் கோவில்களின் நிர்வாகிகள் திருப்பணி வேலைகளுக்கான விரிவான மதிப்பீடுகளை உரிய நடைமுறைகளைப் பின்பற்றி தயார் செய்து அதனடிப்படையில் தேவைப்படும் நிதியினை மானியமாக வழங்கக்கோரி நிதி வசதிமிக்க கோவில்களின் நிர்வாகிகளுக்கு எழுத்துபூர்வமாக மனு அளிக்க வேண்டும், நிர்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதியின் அடிப்படையில் விதிகளைப் பின்பற்றி திருப்பணி வேலைகள் தொடங்கப்பட வேண்டும் என அனைத்து சார்பு நிலை அலுவலர்களுக்கும், கோவில் நிர்வாகிகளுக்கும் இந்த அறிக்கையை பின்பற்றுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Von Admin